Dec 21, 2013

ஒரு பனித்துளி தாகம் !!




ஒரு பனித்துளி தாகம் !!

திங்கள் முகம் மறந்து,
திண்ணை எங்கும் உடல் நனைந்து !

மஞ்சள் வெயில் துறந்து,
மல்லிகை இதழ் நுழைந்து !

மார்கழி மதி முகத்தை,
பசலையாய் பால் திரிந்து !

அதிகாலைப் பாய் விரிப்பாய்,
நுனிப்புல் உடல் குழைந்து !

ஆதவன் நாளங்களும்,
அர்த்தம் அற்று குளிர் நடுங்க !

கனவோடு என் தாகங்களும்,
தயங்குது உனைக் கண்டு !

காற்றில் கை வீசி,
அள்ளி உன்னை நான் பருக !

தொண்டைக் குழி தாண்டா,
விரதம் தான் உன்னில் ஏனோ !

நின் முகம் கூட,
கானலின் சாயல் தானோ !

நிலம் நனைத்தும்,
தன்னில் அடங்கா நின் தாகம் !

அது போல் தானோ,
உறவு என்னும் சுனை நீரும் !

அடி முட்டும் மலை ஓங்கி !
அதில் கொஞ்சம் சுனை ஏந்தி !
இதழ் நனைத்து, குரல் நனைத்து !
இதயக் குவளை நிறைத்து !

தள்ளாடும் சொந்தகளாய்,
விரிசல் வழி கசிந்தனவே !

புன்னியத் தீர்த்தம் யாவும்,
தாகம் தீர்த்தச் சுவடில்லை !

உனைப் போல பனித்துளியே !

ஒரு பனித்துளி தாகம் !!
- சுந்தர் .ப
21/12/2013, 10:15pm.

No comments: